குருவருளே திருவருள்! சத்குருவே துணை! திருவருளே குருவருள்!

Tai Images

சத்குரு ஹைகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள்

புவியெங்கும் பரவி உயிர் நலம் வேண்டி தவமிருந்த சித்தர்களை ஈன்ற புனித பாரதத்தில் தருமமிகு சென்னையில் அருட்பிரகாச வள்ளலார், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போன்று பூக்கடை, தங்கசாலை, பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகம் என பல இடங்களில் ஞான சூரியனாக வலம் வந்து கடுந்தவத்தால் உலகைக் காத்த உத்தம சித்தர் தாம் சத்குரு ஹைகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள் ஆவார்கள். 1975 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் தவமிருந்த மகாசுவாமிகளை நிறைய பக்தர்களும், அடியார் பெருமக்களும் சந்தித்து... உரையாடி... அருளாசி பெற்றுச் சென்றிருக்கின்றனர். ஜென்மத் தொடர்புள்ள அதீத ஆன்மீக தாகம் கொண்ட சில அடியவர்களுக்கு பரிபாஷை மூலம் தம் ஆத்ம சக்தியை ஞானதானம் செய்த மகாகுருநாதர் இவர். பாரபட்சமின்றி தம்மிடம் வரும் அனைவரையும் ஆதரித்த தெய்வமாகிய அய்யா அடியவர்களுக்கு சத்தியத்தையும், தருமத்தையும் சூக்குமமாக போதித்தார்.

வார்த்தைகளில் வடிக்க இயலாத எண்ணற்ற அற்புதங்களை, அதிசயங்களை மறைமுகமாக நிகழ்த்திய மகா சித்தபுருஷர். தூய்மையும், நேர்மையும், உண்மையுமே அவரளிக்கும் பரிசாகும். நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் வரும் அடியவர் தம் உடற்பிணிகள் நீங்கின. மனக்கவலைகள் மாயமானது.. கர்மவினைகள் கரைந்தோடின... உள்ளிருக்கும் உத்தமப்பொருளை அழிவில்லா ஆனந்த ஆத்ம ஞான குருவை தூண்டி எழச் செய்பவர் இப்பரம புண்ணிய புருஷர். உள்ளம் உருக வரும் அடியவர்க்கு தன்னுணர்வு பொங்கும் தவத்தினை அள்ளிப் பருகச் செய்யும் ஆதி ஞானமூர்த்தி.

  • பசிதீர்த்தல் பரமபுண்ணியம்..., தானமும், தவமும், தருமமும் வானவீடு திறக்க வழிகளென அறுதியிட்டு உரைத்தவர் நம் அய்யா, இவரைக்கண்டபோது பிணிகள் தீர்ந்தது. மனம் நிம்மதியானது. ஆத்மா லயமாகி சாந்தமானது. தன்னுணர்வின் ஏகாந்த சுக அனுபவத்தில் ஈர்க்கப்பட்ட அடியவர்கள் அவ்வப்போது அய்யாவை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டனர் கர்மவினைகள் மீண்டும் சாராத தர்மவழியில் கவனமாக அழைத்துச் செல்லும் ஞான ஆதவன், எல்லாம் அறிந்த பரம்பொருளின் வடிவமாயினும் ஏதும் அறியாதது போல அமைதியாக அமர்ந்திருப்பார். சிரசே உயிர்நீதிமன்றம் அங்கு லயமாகும் ஜீவனே (சிரம்+ஜீவி) ஆதியின் சமநிலையை (ஜீவ+சம+ஆதி) உணர்ந்து வீடுபேறு அடையும் என்பார். உள்ளே ஓடுது பழனி, உற்று நோக்கினால் நீயும் பழனியப்பன் என்பார். அனைவரையும் அன்புடன். வா தெய்வம்! என்றழைப்பார். நம்பினால் நீ தெய்வம்...! நம்பு, தெய்வம்...! என்பார். தவத்தினாலும் தருமத்தினாலும் தன்னை உணர்ந்து தெளிந்தவன் ராஜராஜன் என்பார். இவ்வாறு தன்னைக் காணவரும் அடியவர்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அன்பு காட்டி நல்வழிப் படுத்திய மகா சத்குரு ஹைகோர்ட் அய்யா அவர்கள் 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ந் தேதி காலை அவிட்டம் நட்சத்திரத்தில் பேரண்டப் பிரபஞ்ச மகா சமாதிப் பெருநிலை எய்தி எல்லையற்று எங்கும் பரவினார்கள்.
ஜீவசமாதி ஆலய கட்டுமானப் பணிகள்
  • விண்ணவர் போற்றும் மறை மெய்ப்பொருளாக அருள்ஞானப் பொக்கிஷமாக அய்யா கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கும் ஜீவசமாதி நிலைய ஆலயத்தில் உயிர்நலம் பரவி, உலகம் உய்ய, அற்புதமான ஆத்மார்த்தமாக ஞான ஆலயம் கட்டுமானப் பணிகள் இனிதே தொடங்கிவிட்டன. சத்குரு ஐகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள் அறக்கட்டளை இப்பணியினை சிரமேற்கொண்டு செவ்வனே செய்து வருகின்றது. உலகநலம் வேண்டி பக்தி, ஞான, இசை வழிபாடுகள் இனிதே நடைபெற உள்ளன.

    அன்பும், தெய்வீகமும் கலந்து கலை, இசை, தமிழ், யோக ஞானம், சத்விசாரம், திருமுறை தியானம், ஞானநுல் வாசிப்பு, சித்த மருத்துவம், யோக ஞான தவமுறைகள் மீண்டும் ஆத்மார்த்தமாக உலக அமைதிக்காக இறையருளாலும், குருவருளாலும் நிகழவுள்ளன. மஹா தியான மண்டபம், நூலகம், கலைப்பண்பாட்டு மையம், நந்தவனம், அன்னதான மகா மண்டபம் என ஜீவசமாதி ஆலயத்தைச் சுற்றிலும் பல பயனுள்ள கட்டட அமைப்புகள் நேர்த்தியாக அமைய உள்ளன. பிறந்த பிறவியின் பயன் மட்டுமல்லாது நம் பரம்பரைக்கே புண்ணியம் சேர்க்கும் இத்திருப்பணியில் அன்பர்களும், தொண்டர்களும் பக்தர்களும், அடியார் பெருமக்களும் தங்களை இணைத்துக் கொண்டு குருவருளுக்குப் பாத்திரமாகி சகல செல்வ யோகமிக்க ஞானப் பெருவாழ்வு பெற வேண்டி வணங்கி அன்புடன் அழைக்கின்றோம்...

இரை தேடுவதோடு இறையும் தேடுவோம்...!
பலபணி இருப்பினும் திருப்பணி செய்வோம், வாருங்கள்...!

--இங்ஙனம் சத்குரு ஹைகோர்ட் அய்யா
ஸ்ரீ ராஜராஜ சுவாமிகள் அறக்கட்டளை.
Tai Images Tai Images